நெல்லை: மேலப்பாளையம் மக்களுக்கு "பூரண மருத்துவம்" கிடைக்க
வெளியிடங்களில் பணியாற்றும்
உள்ளூர் மருத்துவர்களை
"தற்காலிக பணியிடமாற்றம்" செய்ய வேண்டும்
மாவட்ட ஆட்சியர் - மாநகராட்சி ஆணையருக்கு
மேலப்பாளையம் பொதுநலக்குழு கோரிக்கை
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மக்களுக்கு "பூரண மருத்துவம்" கிடைக்க, வெளியிடங்களில் பணியாற்றும் உள்ளூர் மருத்துவர்களை "தற்காலிக பணியிட மாற்றம்" செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மேலப்பாளையம் பொதுநலக்குழு நிறுவனர் எம்.முகம்மது யூனுஸ் , நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் ஆகியோருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் "கோரோனா" நோய் தொற்றை முன்னிட்டு தனியார் மருத்துவமனை மருத்துவர்களே நோயின் கொடுமைக்கு பயந்து தங்கள் ஆஸ்பத்திரியை மூடிவிட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் அளித்து உத்தரவின் பேரில் மேலப்பாளையத்தில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகள் குறைந்த கால அளவு நேரத்தோடு, அரைகுறை மனதோடு பெயரளவில் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் வெளியிடங்களான கூடங்குளம், தென்காசி, மாறாந்தை, ஆலங்குளம், கயத்தாறு போன்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்தியில் பணியாற்றும் "மேலப்பாளையம் வாழ் உள்ளூர் மருத்துவர்களை" மேலப்பாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்ய "தற்காலிக பணியிட மாற்றம்" செய்ய வேண்டும்.
இதன்மூலம் அந்த மருந்துவர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதி என்பதால், எந்தவித அச்சமும் இல்லாமல் "அர்பணிப்புடன்" பணியாற்றுவார்கள். மேலப்பாளையம் மக்களும் தனியார் மருத்துமனையை எதிர்பார்க்காமல் "பூரண மருத்துவம்" பெறமுடியும்.
இவ்வாறு அவர் தமது கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளார்.