தென் தமிழகத்தில் முதல் முறையாக அரிதான இருதய வால்வு மற்றும் தமனியில் அறுவை சிகிச்சையை செய்து மதுரை பிரீத்தி மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
மதுரை உத்தங்குடியில் உள்ள பிரீத்தி மருத்துவமனயின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவாக இருதய நலத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களுடன் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் மேல்மங்கலம் முத்தையா என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (வயது 56) ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவருக்கு ஆபத்தான அரிய வகை ரத்தக் குழாய் நோய் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு மகாதமணியில் பிளவு ஏற்பட்டு இருதய வால்விலும் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார். மேலும் இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சைக்கு 10 லட்சம் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் தான் இதை செய்ய முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர். பல இடங்கள் சென்று மிகவும் நம்பிக்கை இழந்த நிலையில் பேச்சியம்மாள் பிரீத்தி இருதய சிகிச்சை மையத்தை அணுகினார். ப்ரீத்தி மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு அவரை தீவிரமாக பரிசோதனை செய்து அவருக்கு உள்ள சிக்கலான அறுவைச் சிகிச்சை மதுரையிலேயே செய்யலாம் என்று முடிவு செய்தனர். அவரது இருதய வால்வை மாற்றாமல் அதை அப்படியே பழுது நீக்கி மீண்டும் பொறுத்தும் சிக்கலான அறுவைச் சிகிச்சையை நாலு மணிநேரம் மேற்கொண்டு வெற்றிகரமான செய்து முடித்தனர். இத்தகைய வால்வு பழுது நீக்க அறுவைச் சிகிச்சை மிகவும் அரிய வகை சிகிச்சை ஆகும். தென் தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ப்ரீத்தி மருத்துவமனையில் கடந்த 7 மாதங்களில் 300 ஆஞ்சியோகிராம் 110 ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் கடந்த 2 மாதங்களில் 20 ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய அறுவைச் சிகிச்சையை டாக்டர் சங்கர் பத்மநாதன் தலைமையில், இருதய சிகிச்சை நிபுணர்கள் சங்கர்ராமு, ஆஷிக், மீனாட்சி சுந்தரம்,வேல்குமார், சந்தோஷ் ஆகியோர் வெற்றிகரமாக செய்துள்ளனர்.