தூத்துக்குடி அருகே இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கும் இடத்தில் அதிகாரிகள் ஸ்தல ஆய்வு :
பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
தூத்துக்குடி. டிச.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டல்காடு - குலையன்கரிசல் இடையே விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
சார்பில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். குழாய்களை ஏற்றி வந்த லாரிகளை மறித்து, குழாய்களை இறக்க விடாமல் தடுத்தும் வந்தனர்.
இந்நிலையில் மாற்று வழியில் குழாய்களை பதிக்க வலியுறுத்தி குலையன்கரிசல், பொட்டல்காடு கிராம மக்கள் நேற்று (வியாழன்) பொட்டல்காடு கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக நேற்று முன்தினம் மாலையில் அதிகாரிகள் துணை ஆட்சியர் (நில எடுப்பு) தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
பேச்சுவார்த்தை முடிவின்படி, தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி பிரகாஷ், மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் முத்தையா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை பொதுமேலாளர் கவுதமன், சீனியர் கன்ஸ்ட்ரக்ஸன் மேலாளர் முருகேசன் ஆகியோர் நேற்று (வியாழன்) காலை எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட உள்ள வழித்தடங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் அது சம்பந்தமான வரைப்படத்தை அங்குள்ள கோவில் வளாகத்தில் வைத்து, பொதுமக்களிடம் விளக்கம் அளித்தனர். ஆனாலும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் இது இறுதியான முடிவு அல்ல என்றும், ஸ்தல ஆய்வு நடத்திய விபரங்களையும், மக்களின் கோரிக்கைகளையும் அரசுக்கு அறிக்கையாக அனுப்புகிறோம் என்றும் தெரிவித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் ஒருவழியாக சமாதானம் அடைந்தனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஊர் தலைவர் ஏ.செல்லசேகர், திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.ஆஸ்கர், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அருகே இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கும் இடத்தில் அதிகாரிகள் ஸ்தல ஆய்வு :